முதல்-திருமுறை

106 மாறில் அவுணரரணம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : ஊறல்

திருச்சிற்றம்பலம்

 

மாறில் அவுணரரணம் மவைமாயவோர் 

  வெங்கணையா லன்று

நீறெழ எய்தவெங்கள் 

  நிமலன் இடம்வினவில்

தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் 

  பாய்வயலுஞ் சூழ்ந்த

ஊறல் அமர்ந்தபிரான் 

  ஒலியார்கழல் உள்குதுமே.  1 

 

மத்த மதக்கரியை மலையான்மகள் 

  அஞ்சவன்று கையால்

மெத்த உரித்தவெங்கள் 

  விமலன் விரும்புமிடம்

தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் 

  நீலம்நாளுந் நயனம்

ஒத்தல ருங்கழனித் 

  திருவூறலை உள்குதுமே.  2 

 

ஏன மருப்பினொடும் எழிலாமையும் 

  பூண்டழகார் நன்றுங்

கானமர் மான்மறிக் 

  கைக்கடவுள் கருதுமிடம்

வான மதிதடவும் வளர்சோலைகள் 

  சூழ்ந்தழகார் நம்மை

ஊனம் அறுத்தபிரான் 

  திருவூறலை உள்குதுமே.  3 

 

நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு 

  வும்மனலும் அன்று

கையணி கொள்கையினான் 

  கடவுள் ளிடம்வினவின்

மையணி கண்மடவார் பலர்வந் 

  திறைஞ்சமன்னி நம்மை

உய்யும் வகைபுரிந்தான் 

  திருவூறலை உள்குதுமே.  4 

 

எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் 

  போனகமும் பண்டு

சண்டி தொழவளித்தான் 

  அவன்றாழும் இடம்வினவில்

கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை 

  கள்சூழ்ந்து நஞ்சை

உண்டபி ரானமருந் 

  திருவூறலை உள்குதுமே.  5 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  6 

 

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் 

  தெய்துதலுங் கலங்கி

மறுக்குறும் மாணிக்கருள 

  மகிழ்ந்தானிடம் வினவில்

செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் 

  மெய்யுந்நெரிய அன்று

ஒறுத்தருள் செய்தபிரான் 

  திருவூறலை உள்குதுமே.  7 

 

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் 

  முகனும்மறியா தன்று

தேரும் வகைநிமிர்ந்தான் 

  அவன்சேரும் இடம்வினவில்

பாரின் மிசையடியார் பலர்வந் 

  திறைஞ்சமகிழ்ந் தாகம்

ஊரும் அரவசைத்தான் 

  திருவூறலை உள்குதுமே.  8 

 

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் 

  மோட்டமணர் குண்டர்

என்னும் இவர்க்கருளா 

  ஈசன் இடம்வினவில்

தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் 

  சூழ்ந்தழகார் தன்னை

உன்னவினை கெடுப்பான் 

  திருவூறலை உள்குதுமே.  9 

 

கோட லிரும்புறவிற் கொடிமாடக் 

  கொச்சையர்மன் மெச்ச

ஓடுபுனல் சடைமேற் 

  கரந்தான் திருவூறல்

நாட லரும்புகழான் மிகுஞானசம் 

  பந்தன்சொன்ன நல்ல

பாடல்கள் பத்தும்வல்லார் 

  பரலோகத்து இருப்பாரே. 10

 

திருச்சிற்றம்பலம்