பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 21. பரலட்சணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி

அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா

மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்

பதியிற் பதியும் பரவுயிர் தானே.  1 

 

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி

சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்

நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர

போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.  2 

 

 

துரியங் கடந்து துரியா தீதத்தே

அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்

பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே

துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.  3 

 

 

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்

அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்

பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்

செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.  4 

 

 

வைச்ச கலாதி வருதத்து வங்கெட

வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து

உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே

அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.  5 

 

 

என்னை அறிய இசைவித்த என்நந்தி

என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்

பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்

தன்னை அளித்தனன் தற்பர மாகவே.  6 

 

 

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு

நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்

அரந்த அரநெறி யாயது வாகித்

தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.  7 

 

 

சத்தின் நிலையினில் தானான சத்தியும்

தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்

உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்

நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.  8 

 

 

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்

பாலிய விந்து பரையுள் பரையாகக்

கோலிய நான்கவை ஞானம் கொணர் விந்து

சீலமி லாஅணுச் செய்திய தாமே.  9 

 

 

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்

ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்

பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்

ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.  10 

 

 

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி

சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்

தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு

அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.  11 

 

 

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்

துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்

கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே

மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.  12 

 

 

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற

தளியாகியதற் பரங்காண் அவன்தான்

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற

வெளியாய சத்தி அவன்வடி வாமே.  13 

 

 

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்

ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்

சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்

பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.  14 

 

திருச்சிற்றம்பலம்