பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை

பாலான மோன மொழியில் பதிவித்து

மேலான நந்தி திருவடி மீதுய்யக்

கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.  1 

 

 

துரியங்கள் மூன்றுஞ் சொருகிட னாகி

அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி

மருவிய சாம்பவி கேசரி உண்மை

பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.  2 

 

 

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்

ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை

ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி

நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.  3 

 

 

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்

ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்

ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட

மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.  4 

 

 

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்

வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்

வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே

ஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே.  5 

 

 

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்

ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்

ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி

யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.  6 

 

 

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை

போகி தண் புத்தி புருடார்த்த நன்னெறி

ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை

ஏகமும் கண்டொன்றில் எய்தநின் றானே.  7 

 

 

துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்

அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்

தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை

நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.  8 

 

 

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை

ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை

தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை

கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.  9 

 

 

தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்

பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்

மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி

நீநெறி கண்டுள நின்மலன் ஆமே.  10 

  

 

திருச்சிற்றம்பலம்