பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 12. குருபூசை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்

போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்

ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்

போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.  1 

 

 

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுற மாமலர் இட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது

தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே.  2 

 

 

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்

ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை

ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்

சேவடி சேரல் செயலறல் தானே.  3 

 

 

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை

நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை

விச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும்

நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.  4 

 

 

புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம்

பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்

எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்

பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.  5 

 

 

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை

வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்

இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை

வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.  6 

 

 

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்

விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே

சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு

நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.  7 

 

 

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி

அனித உடல்பூத மாக்கி அகற்றிப்

புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்

தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.  8 

 

 

பகலும் இரவும் பயில்கின்ற பூசை

இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்

பகலும் இரவும் பயிலாத பூசை

சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.  9 

 

 

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து

பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி

இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து

இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்