முதல்-திருமுறை

100 நீடலர்சோதி வெண்பிறையோடு

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : பரங்குன்றம்

திருச்சிற்றம்பலம்

 

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை

சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்

ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்

பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.  1 

 

அங்கமொராறும் அருமறைநான்கும் அருள்செய்து

பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்

திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.  2 

 

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை

சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய

ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்

பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.  3 

 

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்

குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்

தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்

நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.  4 

 

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை

பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை

உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.  5 

 

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்

தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்

புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்

படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.  6 

 

அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்

எயில்படஎய்த எம்மிறைமேய இடம்போலும்

மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்

பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.  7 

 

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்

பத்தினதிண்தோள் இருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்

சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று

நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.  8 

 

முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி

உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்

சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

பந்தியல்அங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.  9 

 

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து

மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல

பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்

தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.  10 

 

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்

படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்

தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி

விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சடைய நாயனார்
View Details
மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details
புகழ்த்துணை நாயனார்
View Details