பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 09. திருவருள் வைப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இருபத மாவது இரவும் பகலும்

உருவது ஆவது உயிரும் உடலும்

அருளது ஆவது அறமும் தவமும்

பொருளது உள்நின்ற போகமது ஆமே.  1 

 

 

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்

தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்

வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்

ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.  2 

 

 

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்

வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்

செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்

அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.  3 

 

 

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்

பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை

ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்

சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.  4 

 

 

தானே அறியும் வினைகள் அழிந்தபின்

நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்

ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்

தேனே யனையன் நம் தேவர் பிரானே.  5 

 

 

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை

வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான்அறி யான்பின்னை யார்அறி வாரே.  6 

 

 

அருள்எங்கு மான அளவை அறியார்

அருளை நுகர்அமு தானதும் தேரார்

அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்

அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.  7 

 

 

அறிவில் அணுக அறிவது நல்கிப்

பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு

அறிவது ஆக்கி அடியருள் நல்கும்

செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.  8 

 

 

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு

அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு

அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி

அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.  9 

 

 

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி

அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு

அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி

அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.  10 

 

 

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்

நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்

கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்

நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.  11 

 

 

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி

அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்

உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே.  12 

 

 

அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே

அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு

அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்

அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.  13 

 

 

ஆயும் அறிவோடு அறியாத மாமாயை

ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்

ஆய பலஇந் திரியம் அவற்றுடன்

ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே.  14 

 

 

அருளே சகலமும் ஆய பவுதிகம்

அருளே சராசர மாய அமலமே

இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்

அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே.  15 

 

 

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து

தவமான ஐம்முகன் ஈசன் அரனும்

பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா

நவம்அவை யாகி நடிப்பவன் தானே.  16 

 

 

அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே

இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்

தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே.  17 

 

 

தானே படைத்திடும் தானே அளித்திடும்

தானே துடைத்திடும் தானே மறைத்திடும்

தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்

தானே வியாபித் தலைவனும் ஆமே.  18 

 

 

தலையான நான்கும் தனதுஅரு வாகும்

அலையா அருவுரு வாகும் சதாசிவம்

நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்

துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே.  19 

 

 

ஒன்றது வாலே உலப்பிலி தானாகி

நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை

துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன

நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.  20 

 

 

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு

ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்

போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு

வீயத் தகாவிந்து வாக விளையுமே.  21 

 

 

விளையும் பரவிந்து தானே வியாபி

விளையும் தனிமாயை மிக்கமா மாயை

கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்

அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.  22 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சீரியா சிலம்பாக்கினி சித்தர்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details